நாடாளுமன்றத் தேர்தலின் பிரசாரம் ஓய்ந்து இன்று ஏழாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாளை அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடையவிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை, தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்தது. `இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நான் பங்கேற்க இயலாது “என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், தனது கட்சி சார்பில் பிரதிநிதி ஒருவர் பங்கேற்பார் எனக் கூறியிருந்தார்.
அதேபோல இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்வார் என கூறப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க-வின் பத்தண்டுக்கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது.