அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த காலங்களில் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் பெரிய கட்சிகளை சேர்ந்த அதிபர் வேட்பாளர்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இது பற்றி 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவற்றில் அமெரிக்க அதிபர்கள், வேட்பாளர்கள் மீது நேரடியாக 15 முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில், 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் அதிபராக பணியாற்றிய 46 பேரில், 13 பேர் மீது கொலை முயற்சி தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றில், ட்ரம்ப் மீது பென்சில்வேனியா துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது சேர்க்கப்படவில்லை.
இவர்களில் கடந்த காலங்களில் 9 அதிபர்களில் 7 பேர் தாக்குதல்கள் அல்லது கொலை முயற்சியை எதிர்கொண்டிருக்கின்றனர்.
ஆபிரகாம் லிங்கன்:
அமெரிக்காவின் 16-வது அதிபரான இவர்தான் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய முதல் அதிபர். 1865-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அன்று ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் திரையரங்கில் வைத்து சுடப்பட்டார். தலையில் சுடப்பட்ட ஆபிரகாம் லிங்கன் ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். கருப்பர் இன மக்களுக்காக ஆபிரகாம் லிங்கன் இருந்தமைக்காக கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஜேம்ஸ் கார்பீல்ட்:
அமெரிக்காவின் 20-வது அதிபரான இவர், தனது அதிபர் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்களில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1881-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி இங்கிலாந்து செல்வதற்கான ரயிலில் பயணிக்க வாஷிங்டன் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது, சார்லஸ் கிட்டோ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்ஜ் W புஷ்:
2005-ல் ஜார்ஜியா நாட்டின் திபிலிசி பகுதியில் அந்நாட்டு மிகைல் சாகாஷ்விலியுடன் அணிவகுப்பின்போது, அவர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டு (hand grenade) வீசப்பட்டது. இருவரும் புல்லட் புரூஃப் பாதுகாப்பு கேடயத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தனர். ஆனால், வீசப்பட்ட குண்டு வெடிக்காததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை