Exit Polls: `வீட்டிலிருந்தபடியே தயாரிக்கப்பட்டவை' – கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து மம்தா

கடந்த இரண்டு மாதங்களாக, நடந்து வந்த இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இந்தத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி (நாளை) வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய, ஊடகங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. இதில், பெரும்பாலான ஊடகங்கள் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், கூட்டணியாக 350-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்றும் தெரிவித்திருக்கின்றன.

தேர்தல்

அதேபோல், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட 150 இடங்கள் பெறும் என்றும், எந்த கூட்டணியிலும் சேராத மற்ற கட்சிகள் கிட்டத்தட்ட 40 இடங்கள் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில்,“2016, 2019, 2021-ம் ஆண்டுகளில் நடந்த இதே போன்ற கருத்துக்கணிப்புகள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதை பார்த்தோம். அந்தக் கணிப்புகள் எதுவும் உண்மையாகவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு டி.ஆர்.பி-க்காக சிலர் வீட்டில் இருந்தபடியே கருத்துக்கணிப்புகள் தயாரித்திருக்கிறார்கள். எனவே, அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. பா.ஜ.க இந்த தேர்தலை கையாள முடியாமல் தவித்த விதமும், ஒருகட்டத்தில் முஸ்லிம்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டைப் பறிப்பதாக பொய்யான பிரசாரத்தின் மூலம் பரப்பியதையும் பார்த்தோம். அதே நேரம், சி.பி.ஐ(எம்), காங்கிரஸும் மேற்கு வங்கப் பகுதியில் பா.ஜ.க-வுக்கு உதவியது என்று நான் நினைக்கிறேன்.

மம்தா பானர்ஜி

அகிலேஷ் , தேஜஸ்வி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே ஆகியோர் அவர்கள் பகுதியில் சிறப்பாகச் செயல்படுபவர்கள். ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் சொந்த மரியாதை இருக்கிறது. மாநிலக் கட்சிகள் எல்லா இடங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன. சி.பி.ஐ(எம்) தலையிடாவிட்டால் அகில இந்திய அளவில் ஆட்சியமைக்க எந்தத் தடையும் இருக்காது என்றே நினைக்கிறேன். ஆட்சியமைக்க எல்லாக் கட்சிகளுடன் ஆலோசித்தப் பிறகு, எங்களையும் அழைத்தால் செல்வோம். மற்ற மாநிலக் கட்சிகளையும் அழைத்துச் செல்வோம். எனவே, தேர்தல் முடிவுகள் முதலில் வெளிவரட்டும்.

நான் முன்பு கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றபோது, ​​மேற்கு வங்க நாடாளுமன்றத் தேர்தலில் 25 இடங்களைத் தாண்டிவிடுவோம் என்று சொன்னேன். ஆனால் என் கட்சியைச் சேர்ந்த பலரும்கூட அதை நம்பவில்லை… ஆனால், நான் கூறியது நடந்தது. இப்போதும், பத்திரிகையாளர்களும், மாநில மக்களும் நாங்கள் மேற்கு வங்கத்தில் 25 இடங்களுக்கு மேல் பெறுவோம் என்று நம்புகிறார்கள். அதுதான் நடக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *