இத்தகைய சூழலில், கடந்த வாரம் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது மக்களவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மத்திய பட்ஜெட்டில் 20 அதிகாரிகள் பணியாற்றியிருக்கின்றனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட இதில் இடம்பெறவில்லை.
நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவிகிதம் கொண்ட இந்த மூன்று சமூகத்தினருக்கு பட்ஜெட்டில் எதுவும் கிடைக்கவில்லை. இன்றைய இந்தியாவில் தாமரை வடிவிலான சக்ரவியூகம் இருக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் இதில் சிக்கியிருக்கின்றனர். மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி ஆகிய ஆறு பேர் இதைக் கட்டுப்படுத்துகின்றனர்” என்று உரையாற்றியிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்.பி-யுமான அனுராக் தாகூர், ராகுல் காந்தியை சாதி மற்றும் மதரீதியாக மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருப்பதும், அதனை பிரதமர் மோடி பாராட்டியிருப்பதும் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
ராகுலின் பேச்சுக்கு நேற்று மக்களவையில் எதிர்வினையாற்றிய அனுராக் தாகூர், “தன்னுடைய சாதி தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார். மேலும், ஒரு சிலர் தற்செயலாக இந்துக்களாகினர். அதனால், மகாபாரதத்தைப் பற்றிய அவர்களின் அறிவும் அப்படித்தான் இருக்கும்” என்று தாக்கினார்.