ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடிக்கத் துவங்கினர். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையை நோக்கி திருப்பினர்.
ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது படகின்மீது தங்கள் ரோந்து படகினை கொண்டு மோதினர். இதில் பலத்த சேதமடைந்த படகு கடலில் மூழ்கியது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் மலைச்சாமி, ராமச்சந்திரன், மூக்கையா, முத்துமுனியாண்டி ஆகிய நான்கு பேரும் கடலில் குதித்து உயிருக்குப் போராடிய நிலையில், தங்களை காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பியுள்ளனர்.