`கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் காங்கிரஸ் மௌனம் சாதிப்பது ஏன்?' – கார்கேவுக்கு நட்டா கடிதம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நான்கு நாள்களாக பெரும் விவாதப்பொருளாகவும், தி.மு.க ஆட்சி நிர்வாகத்தின்மீது கேள்வியெழுப்பக்கூடியதாகவும் இருக்கிறது. தற்போதுவரை பலி எண்ணிக்கை 57-ஆக உயர்ந்திருக்கிறது. இதில், தி.மு.க அரசை விமர்சித்துவரும் எதிர்க்கட்சிகள், குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவருகிறது.

கள்ளக்குறிச்சி… கள்ளச்சாராயம்

பா.ஜ.க-வோ இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முழுமையாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க வலியுறுத்திவருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், “கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை ஆளும் தி.மு.க-இந்திய கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமலிருந்திருந்தால், பலியான உயிர்களை இன்று காப்பாற்றியிருக்கலாம். இது தொடர்பான ஊடக மற்றும் விசாரணை அறிக்கைகள், இந்த சட்டவிரோத மதுபான வணிகம் எவ்வாறு தண்டனையின்றி, திறந்த வெளியிலும், பகல் நேரத்திலும், வெளிப்படையாக அரசு மற்றும் காவல்துறையின் அனுசரணையுடன் எவ்வாறு செயல்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஜெ.பி. நட்டா

இவ்வளவு நடந்தபிறகும் உங்கள் (கார்கே) தலைமையிலான காங்கிரஸ் இதில் மௌனம் சாதிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில், பாஜக உட்பட ஒட்டுமொத்த நாடும், தி.மு.க-இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு அரசை சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்ல அழுத்தம் தரவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதை உறுதி செய்யவும் உங்களை வலியுறுத்துகிறது.

மல்லிகார்ஜுன கார்கே

மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அல்லது குறைந்தபட்சம் இதில் அவர்களை குரல்கொடுக்கவாவது சொல்லுங்கள். அதோடு, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன், அரசின் இந்த பேரழிவுக்கு எதிராகக் கருப்பு பட்டை போராட்டத்தில் எங்கள் தலைவர்களுடன் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று நட்டா தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *