கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டையே அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு, கள்ளசாராயம் உள்ளிட்ட போதைப்பொருளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியானதாக இன்று காலை தகவல் வெளியானது.

மேலும், கள்ளச்சாரயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விடியா தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கெனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும்கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்.

“கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்” என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா தி.முக. அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் உயிரிழப்புகள் குறித்து ஜூனியர் விகடனிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக காவல்துறையோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிபடுத்தவில்லை. குடிப்பழக்கமே இல்லாத ஒருவர்கூட உயிரிழந்திருக்கிறார். அதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.