தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்! தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்!” எனப் பேசியதாகத் தகவல் வெளியாகி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து, செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.


அதில், “தமிழ்நாடு ஆளுநர் குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் எனப் பேசியதாக கூறப்படும் இது போன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது.