அந்தநிலையில், தி.மு.க அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா அறக்கட்டளை வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என மத்திய அரசின், மத்திய தணிக்கை குழு அறிக்கையிலேயே (CAG Report – Comptroller and Auditor General of India) இருக்கிறது” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேசமயம், அமைச்சரின் கருத்துக்கு மாறாக, `ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை’ என தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஐ-யில் பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்ராஜா என்பவர் ஈஷா ஆக்கிரமிப்பு தொடர்பாக கோவை வனக்கோட்ட பொது தகவல் அலுவலருக்கு ஆர்.டி.ஐ மூலமாக கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பதிலில், “ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எந்த ஆக்கிரமிப்போ அத்துமீறலோ செய்யப்படவில்லை. ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்கள் எதுவும் வனப்பகுதியில் இல்லை! அதேபோல வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் என்ற எதுவும் இல்லை!” எனத் தெரிவிக்கப்பட்டது. இது சூழலியலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதையடுத்து அப்போதைய வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், “கோவை ஈஷா யோகா மையம் ஒரு சென்ட் நிலத்தைக்கூட ஆக்கிரமிக்கவில்லை என அறிக்கை கொடுத்திருக்கிறது. ஈஷாவால் வனத்துறையின் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும்!” எனத் தெரிவித்தார். இந்த சர்ச்சைகளுக்கு இடையில் கடந்த 2023-ம் ஆண்டு ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்தியில் தி.மு.க அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். இதுவும் தி.மு.கவின் இரட்டை நிலைப்பாடு என விமர்சிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் சமீபத்தில்கூட, 2024 ஜூன் 1-ம் தேதி ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் மரக்கன்றுகள் நடும் விழாவையும் அமைச்சர் மனோ தங்கராஜ்தான் தொடங்கி வைத்தார். அதேபோல, ஜூன் 23-ம் தேதி ஈஷா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்திய உணவுக்காடு வளர்ப்பு மற்றும் காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி எம்.எம். அப்துல்லா, `வனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கு ஈஷா உள்ளிட்ட ஏனைய அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார். அதற்கு விளக்கமளித்த எம்.எம் அப்துல்லா, “ஈஷாவுக்கு மட்டுமல்ல.. அவர்களோடு இணைந்து பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த நிகழ்வை முன்னெடுத்தனர். அத்தனை பேருக்கும்தான் வாழ்த்து தெரிவித்தேன்!” எனத் தெரிவித்தார்.
`ஈஷா விவகாரத்தில், தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க அமைச்சர்களிடத்திலேயே ஒருமித்த கருத்து இல்லாதது போன்றே தெரிகிறது. இது தான் அரசின் மெளனத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள்.’
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88