“நீ என்னை அடிமை என்று நினைக்கும்போது… உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடுவது என் கடமை!’ – டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
நடந்துமுடிந்திருக்கும் மக்களவைத் தேர்தல் 2024-ன் முடிவுகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால், தனிப்பட்ட வகையில் பா.ஜ.க 63 தொகுதிகளைப் பறிகொடுத்து, தனிப்பெரும் கட்சி என்கிற அந்தஸ்த்தை இழந்துள்ளது.
இது எதைப் பற்றியும் நரேந்திர மோடி கவலைப்பட்டதுபோல தெரியவில்லை. இத்தனை தொகுதிகளைப் பறிகொடுத்து வெற்றியில் தோல்வியைச் சந்தித்திருக்கும் போதும்… ‘மக்கள் என் மீதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ என்று கூச்சமே இல்லாமல் வாய் திறந்திருக்கிறார் மோடி.
மிஸ்டர் மோடி… உங்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதற்கு சாட்சியாகத்தான் 63 தொகுதிகள் பறிபோயிருக்கின்றன. இதற்குப் பிறகும்கூட, ‘தெய்வக் குழந்தை’ நிலையைவிட்டு, நிதர்சன உலகத்துக்கு வருவதற்கு கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள.


நீங்கள் மிகமிக எதிர்பார்ப்புடன் இருந்த உத்தரப் பிரதேசத்திலேயே பலத்த அடி விழுந்துள்ளது. புண்ணியபூமி… ராமஜென்மபூமி… என்றெல்லாம் ராமரைக் காட்டிக் காட்டியே எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்று நீங்கள் போட்டத் திட்டமெல்லாம் தவிடு பொடியாகிவிட்டது. ஆம், அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியையே உங்களிடம் இருந்து பறித்து, சமாஜவாடி கட்சிக்கு வாரி வழங்கிவிட்டனர் அம்மக்கள். பாவம்… அந்த அளவுக்கு உங்கள் ராமர் ஆட்டத்தால் நொந்து நூலாகிவிட்டனர் அயோத்தி மக்கள். ‘கடவுளை கடவுளாகப் பாருங்கள்… கட்சியில் சேர்க்காதீர்கள்’ என்பது அவர்கள் சொல்லயிருக்கும் சேதிகளில் ஒன்று.
இப்படி நாடு முழுக்க நீங்கள் பறிகொடுத்தவற்றுக்கெல்லாம் அந்தந்த மக்கள் சொல்லியிருக்கும் சேதிகள் பற்பல. ஆனால், மணிப்பூர் உங்களுக்குச் சொல்லியிருக்கும் சேதி… ஒன்றே ஒன்றுதான். அது, ‘கொடுங்கோன்மைக்கு மரண அடி’ என்பது மட்டுமே.
மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டு காலமாக இனரீதியில் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு, ரத்தம் குடிக்கப்பட்டு வருவதும்… வழக்கம்போல பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளும் நினைத்துப் பார்க்கவே நடுநடுங்க வைக்கின்றன. அதற்கான பதிலடியை… தண்டனையை… தங்களது வாக்குகள் மூலம், திருப்பிக் கொடுத்துள்ளனர் அம்மாநில மக்கள்.