ஏழாவது முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர்!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் முழுமையான ஏழாவது பட்ஜெட் இதுவாகும். முன்னாள் நிதி அமைச்சர்களாக இருந்த மன்மோகன் சிங், யெஷ்வந் சின்ஹா, பி.சிதம்பரம், அருண் ஜேட்லி ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நிதி அமைச்சராக இருந்தபோது, தொடர்ந்து 6 முறை தாக்கல் செய்திருக்கிறார். இடைவிட்டு, மீண்டும் 4 முறை என மொத்தம் 10 முறை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், நிர்மலா தொடர்ந்து ஏழாவது முறையாக தாக்கல் செய்யப் போகிறார். மேலும், பாஜக ஆட்சியில் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அவரையும் மிஞ்சுகிற மாதிரி சாதனை படைக்க வாய்ப்புள்ளது.


பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
கடந்த நிதி ஆண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை இலக்கானது, 4.5 சதவிகிதமாகக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, பொருளாதார வளர்ச்சி சுணக்கம் காணாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தேவையான நடவடிக்கைகளையும் நிதி அமைச்சர் அறிவிக்க வாய்ப்புண்டு. முக்கியமாக, எம்.எஸ்.எம்.இ என்று சொல்லப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் என அந்தத் துறை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.