Modi: `மோடியின் செங்கோல் நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது' – ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!

மூன்றாவது முறை பிரதமராக, என்.டி.ஏ கூட்டணி மோடியை தேர்வு செய்திருக்கிறது. இன்று மாலை பிரதமராக மோடி பதிவியேற்கவிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவில் உள்ள பிரதமர்களில் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கப் போவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஒரு கட்சியை வழிநடத்தி 240 இடங்களில் வெற்றிபெறச் செய்வது மட்டும், ஒரு பிரதமரின் வேலையல்ல.

நேரு தன் மகள் இந்திரா காந்தியுடன்…

அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ச்சியாக 1952-ம் ஆண்டில் 364 இடங்களிலும், 1957-ம் ஆண்டு 371 இடங்களிலும், 1962-ம் ஆண்டில் 361 இடங்களிலும் வெற்றிபெற்றார். போட்டியிட்ட அனைத்து முறையும் மூன்றில் இரண்டு பங்கு தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார். ஆயினும் அவர் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், நாடாளுமன்றத்தை மிகவும் கவனமாக, நிலையான இருப்பில் வைத்திருப்பவராகவும் இருந்தார்.

நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் மோடி மட்டுமல்ல. நேருவைத் தொடந்து இந்திரா காந்தி, 1966, 1967, 1971 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் 4 முறை பிரதமராகவும், அடல் பிஹாரி வாஜ்பாய், 1996, 1998 , 1999 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பிரதமராகவும் பதவியேற்றனர். பிரதமர் மோடியின் இந்த பரிதாபகரமான தேர்தல் நிலையை நியாயப்படுத்த என்ன வேண்டுமானலும் சொல்லி அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி

அதைத் தொடர்ந்து இன்று, “மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த நாள் – மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும், 15 ஆகஸ்ட் 1947-ம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது.

அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது. ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்.” என விமர்சித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *