விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில், அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா கல்லூரி அருகே இடம் இருப்பதாகத் தெரிந்தது. அந்த இடம், சென்னை – திருச்சி நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமைந்திருப்பதாலும், மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாத மண்ணோடு இருப்பதாலும் அதையே தேர்வு செய்தார் ஆனந்த். தொடக்கத்திலிருந்தே, செப்டம்பரில் மாநாடு நடத்துவதில் ஆனந்துக்கு உடன்பாடே இல்லை. ‘மழைக்காலத்தில் மாநாடெல்லாம் வேண்டாம். தவிர, குறைந்த கால இடைவெளிக்குள் லட்சக்கணக்கானோர் கூடும் மாநாட்டை நடத்துவது சிரமம். அடுத்தாண்டு ஜனவரியில் நடத்திக் கொள்ளலாம்’ என விஜய்யிடம் பேசிப் பார்த்தார் ஆனந்த். ஆனால், செப்டம்பரில் மாநாட்டை நடத்துவதிலிருந்து விஜய் பின்வாங்கவில்லை. வேறுவழியில்லாமல் ஆனந்தும் சம்மதித்தார். செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மாநாடுக்கான தேதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.
மாநாடுக்கு ஒருநாள் முன்னதாகவே விழுப்புரத்திற்கு வரும் விஜய், அங்கேயே தங்கியிருந்து மாநாடுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். மாநாட்டை மாலை 3 மணிக்குத் தொடங்கவும், மாலை 6 மணிக்கு விஜய் உரை நிகழ்த்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நலன் சார்ந்தும், உரிமை சார்ந்தும் 18 தீர்மானங்கள் வரை மாநாட்டில் நிறைவேற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அரசைக் கண்டித்தும் சில தீர்மானங்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. இதற்கானப் பணிகளையெல்லாம் ஆனந்த் தான் ஒருங்கிணைக்கிறார்” என்றனர்.
செப்டம்பர் 22-ம் தேதி முருகக் கடவுளுக்கு உகந்த கார்த்திகை விரத நாள் என்பதால், அன்றைய தினமே மாநாட்டை நடத்த பாண்டிச்சேரி ஆனந்த் தான் தனது ஆஸ்தான ஜோதிடர் மூலமாக தேதி குறித்ததாகச் சொல்கிறது த.வெ.க வட்டாரம். இதற்கிடையே, “அன்றைய தினம் தேய்பிறை. கட்சியை யாராவது தேய்பிறையில் தொடங்குவார்களா..?” என்கிற குமுறலும் கட்சிக்குள் கேட்கத் தொடங்கியிருக்கிறது. செப்டம்பர் மாதம் முதல் மாநாட்டை நடத்துவதில் விஜய் உறுதியாக இருப்பதால், அதற்கான பணிகளை இப்போதிருந்தே தொடங்கிவிட்டனர் த.வெ.க கட்சியினர். கட்சிக்குள் அமைக்கப்படவுள்ள 100 மாவட்ட அமைப்புகளிலும், மாவட்டத்திற்கு தலா 5,000 பேரைத் திரட்டிவர தலைமையிலிருந்து உத்தரவு பறந்துள்ளதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எந்தெந்த தீர்மானங்களை நிறைவேற்றுவது, அதை மேடையில் யார் வாசிப்பது என்கிற பட்டியலும் தயாராகி வருகிறது.