திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
“இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. நம் அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள, மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்கள், அம்பேத்கரின் அரசியல் சாசனம் முன்பு தலைகுனிந்து நிற்கின்றனர். இந்த மேடையில் உள்ள தலைவர்களிடையே அரசியல் உறவு இல்லை. இது கொள்கை உறவு. தேர்தல் அறிவித்த பிறகும் பாஜக விதிகளை மீறி வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டது.
ஒடிசாவிலும், பீகாரிலும் தமிழர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பினர். நாடாளுமன்றத்தில் 234 உறுப்பினர்கள் பாஜகவுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். 40 எம்பிக்கள் நாடாளுமன்றம் கேன்டீன் சென்று, வடை சாப்பிடுவார்கள் என சில அதிமேதாவிகள் கூறுகிறார்கள். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் கருத்துகளால் உங்கள் ஆணவங்களை அடக்குவார்கள். wait and see.
பலம் பொருந்திய எம்பிக்கள் இணைந்து, பலம் இல்லாத மைனாரிட்டி பாஜகவின் பாசிச செயல்களைத் தடுத்து நிறுத்தங்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஜகவைத் தடுத்து, அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கும் அரணாக 40 எம்பிக்கள் இருப்பார்கள்.
சட்டமன்ற தேர்தல் வரும்போது, அதிமுக வசமுள்ள தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனச் சிதம்பரம் கூட்டத்தில் பேசினேன். தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்துப் பேசினேன். தமிழக மக்களின் நம்பிக்கை வீண் போகாது. தமிழகத்தில் இனி எப்போதும் திராவிட மாடல் ஆட்சிதான் என்ற நிலை உருவாக உழைப்போம்.”