`அண்ணாமலைக்கும், கரூர் அதிமுக-வுக்கும் இடையில் ஊழல் கூட்டணி!' – குற்றம்சாட்டும் ஜோதிமணி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக கரூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் வழங்கினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி,

“இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமோ, அரசியல் முதிர்ச்சியோ கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உட்பட எல்லோர் மீதும் சேற்றை வாரி இறைப்பது அவருடைய அரசியல். மக்களுக்கான பிரச்னைகளுக்கு முன்பு நிற்பது கிடையாது. அண்ணாமலைக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பாரதிய ஜனதாவுக்கு கைகட்டி சேவகம் செய்து தனது காவல்துறை பதவியை துஷ்பிரோகம் செய்து ஒரு நேர்மையற்ற காவல்துறை அதிகாரியாக இருந்தவர்தான் இந்த அண்ணாமலை.

பேட்டியளிக்கும் ஜோதிமணி

அதனால்தான், அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த ஒரே வருடத்தில் மாநில தலைவரானார். யாத்திரை என்று ஒன்று நடத்தி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி உள்ளார். லுலு மால் போன்ற நிறுவனங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, பின்னர் அமைதி காப்பது ஏன்?. இடையில் கமிஷன் பெற்று விட்டாரா?. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. அவர் ஏற்கனவே அமைச்சராக இருந்த பொழுது 300 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என முன்பே அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. தான் கைது செய்யப்படுவோம் என உணர்ந்து ஒரு மாத காலமாக தலைமுறைவாக உள்ளார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தமிழக கவர்னர் அனுமதி அளித்துள்ளார். ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஒரே ஒரு கோப்பில் மட்டும் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. அதற்கு காரணம் அண்ணாமலை தான் என நான் பல தடவை குற்றம்சாட்டி உள்ளேன். இந்த மாதிரி ஒரு ஊழல் கூட்டணி தான் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க-வுக்கும் கரூரில் நடைபெற்று வருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *