பாஜக: `நாங்கள் தேர்தல் வியூகம் அமைத்தோம்; அண்ணாமலை அதை ஏற்றுக்கொள்ளவில்லை!' – தமிழிசை சௌந்தரராஜன்

நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “25 ஆண்டுகளாக அரசியல் செய்துகொண்டிருக்கிறேன். என் அனுபவத்தில், ஆளும் அரசு என் பக்கத்தில்கூட வரமுடியாது. தென் சென்னை மக்கள் என்னை தேர்ந்தெடுக்காமல், ஒரு நல்ல வேட்பாளரை தவறவிட்டுவிட்டார்கள் என்பதுதான் என் கருத்து.

அண்ணாமலை

`திமுக அடக்கிவைக்கா விட்டால், எனக்கு கெட்டக் கோபம் வரும்!’ – தமிழிசை, பாஜக 

தி.மு.க தன் ஐ.டி விங்கை அடக்கி வைக்க வேண்டும் என ஸ்டாலினிடம் கூறிக்கொள்கிறேன். தோல்வி எல்லோருக்கும் வரும். அதற்காக கிண்டல் செய்வதா… மீண்டும் என்னைப் பரட்டை என விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். என் முடி பரட்டையானாலும் உண்மையானது. எனவே, தி.மு.க தன் இணையதளவாசிகளை அடக்கி வைக்காவிட்டால் எனக்கு கெட்டக் கோபம் வரும்.

40 எம்.பி-க்கள் நாடாளுமன்றம் சென்று என்ன செய்யப்போகிறீர்கள். வெளிநடப்புதான் செய்வீர்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாத ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். ஆளுநராக அல்ல, பா.ஜ.க-வின் முன்னாள் தலைவராக உங்களுக்கு முன்னால் இருக்கிறேன். இனி எங்களின் அரசியலைப் பார்ப்பீர்கள். தென் சென்னை மக்களுடன் எப்போதும் நிற்பேன். மக்களுக்கு சேவை செய்வதில் தீவிரமாக இருப்பேன். எங்களை மீறி சேவை செய்துபாருங்கள். இதை சவாலாகவே சொல்கிறேன்.

தமிழிசை

அ.தி.மு.க – பா.ஜ.க பிரிந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என வேலுமணி அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். அ.தி.மு.க-வுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தால், இன்றைக்கு தி.மு.க-வுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது யதார்த்தமான உண்மை. கூட்டணி என்பது ஓர் அரசியல் வியூகம். அந்த வியூகத்தை தி.மு.க-வினர், தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த யதார்த்தமான உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

`அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை’ – தமிழிசை, பாஜக 

நாங்கள் இரண்டாவதாக வரக்கூடியவர்கள் கிடையாது. வெற்றிப்பெறக்கூடியவர்கள். எல்லாக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை ஒன்றுசேர்த்தால், தி.மு.க வெற்றிப்பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பது என் உறுதி. ஆனால், கூட்டணி வைப்பதே கட்சியை கீழே கொண்டுபோவது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன். இந்த தேர்தலிலும் கூட்டணி வியூகத்தை அமைத்தோம். ஆனால், அண்ணாமலை அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழிசை சௌந்தரராஜன்

மாநிலத் தலைவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுப்பேன். நானும் மாநிலத் தலைவராக இருந்தவள்தான். அதே நேரம் எனக்கு என்ன கருத்து இருக்கிறதோ அதை சொல்வதற்கும் நான் தயங்கமாட்டேன். கட்சியில் அதற்கான ஜனநாயகம் இருக்கிறது. கூட்டணி அமைத்திருந்தால் வென்றிருப்போம் என அண்ணாமலையும், அ.தி.மு.க-வினரும் கூட கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும். நிச்சயம் 2026-ல் தி.மு.க அரசு கீழே இறக்கப்படும். ஏற்கெனவே 7 சதவிகித வாக்குகளை தி.மு.க இழந்திருக்கிறது. நாங்களெல்லாம் வெற்றிப்பெற்றிருக்கவேண்டியவர்கள். 2026-ல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி இருக்குமா இல்லையா என்பது குறித்து விவாதிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *