Mumbai: சட்டவிரோத குடிசைகளை அகற்ற முயன்ற போலீஸ்மீது கல்வீச்சு; 20 போலீஸார் உட்பட 30 பேர் காயம்! | mumbai BMC demolishes slum in Powai amidst stone-pelting, lathi charge

மும்பையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், குடிசைகளில் வசிக்கின்றனர். இன்னும் குடிசைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இதற்கு போலீஸாரும், மாநகராட்சி ஊழியர்களும் துணை போகின்றனர். 2007ம் ஆண்டு பவாய் என்ற இடத்தில் தொழிலாளர்களுக்காக 500 தற்காலிக குடிசைகள் அமைக்கப்பட்டது. அக்குடிசைகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இப்போது 1,000 குடிசைகளாகிவிட்டது. இதில் சட்டவிரோத குடிசைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து சட்டவிரோத குடிசைகளை அகற்றும்படி மாநகராட்சி நிர்வாகம் குடிசைவாசிகளுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் யாரும் குடிசைகளை இடிக்கவில்லை. மும்பை உயர் நீதிமன்றமும் குடிசைகளை இடிக்க சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அக்குடிசைகளை இடிக்க வந்தனர். உடனே பொதுமக்கள் குடிசைகளில் இருக்கும் தங்களது உடமைகளை எடுத்துக்கொள்ள வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஆனால் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த குடிசைவாசிகள், போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள்மீது கல்வீசித் தாக்கினர். போலீஸாரும் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே 30 நிமிடத்திற்கும் மேல் மோதல் நடந்தது. சம்பவ இடத்திற்கு கூடுதலாக ரிசர்வ் போலீஸார் 500 பேர் வரவழைக்கப்பட்டனர். இத்தாக்குதலில் உதவி போலீஸ் கமிஷனர் பரத் சூரியவன்சி உட்பட 20 போலீஸார், 10 மாநகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 30 பேர் காயம் அடைந்தனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் பரத் சூர்யவன்சி தெரிவித்தார்.

கல்வீசித் தாக்கிய 20 குடிசைவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரும், குடிசைவாசிகளும் மோதிக்கொண்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. இது குறித்து அக்குடிசைப்பகுதியில் வசிக்கும் கவிதா தோரட் என்ற பெண் கூறுகையில், “எனது 18 வயது மகள் வீட்டில் இருந்து வெளியில் வர மறுத்ததால் அவளை பிடித்துச்சென்றுள்ளனர்”‘ என்றார். மற்றொரு பெண் ஆர்த்தி இது குறித்து கூறுகையில், ”மழை காலம் நெருங்குகிறது. இந்த நேரத்தில் நாங்கள் எங்கே செல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *